முகப்பு
புதுதில்லி

ஒடிசா சிட் பண்டு மோசடி: சிபிஐ விசாரணைக்கு பாஜக வலியுறுத்தல்

ஒடிசா மாநிலத்தில் கோடிக்கணக்கில் நடந்திருக்கும் சிட் பண்டு மோசடியில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் சிலருக்கு

Updated On : 12 செப்டம்பர், 2013 at 10:49 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

ஒடிசா மாநிலத்தில் கோடிக்கணக்கில் நடந்திருக்கும் சிட் பண்டு மோசடியில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

சிட் பண்டு மோசடி குறித்து நடந்து வரும் விசாரணை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது ஒடிசா அரசு. மாநில ஆளுநருக்குக் கூட தவறான தகவல்களை அளிக்க நவீன் பட்நாயக் அரசு தயங்கவில்லை என்று பாஜக தேசிய துணைத் தலைவர் ஜுவல் ஓரம் புகார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

Advertisement

ஏடி குரூப் நிறுவனங்கள் தொடர்பான நிதி மோசடி வழக்குகளை மாநிலப் பொருளாதாரக் குற்றப் பிரிவுதான் விசாரிக்கிறது என்று ஆளுநருக்கு கடந்த ஜூலை மாதம் தகவல் தரப்பட்டது. ஆனால் இந்த வழக்கைத் தான் விசாரிக்கவில்லை என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

 ஏடி குரூப் நிறுவனங்கள், சீஷோர் குரூப் உள்ளிட்ட மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை பொருளாதாரக் குற்றப் பிரிவுதான் விசாரித்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஆளுநரின் முதன்மைச் செயலருக்கு எழுதியிருந்த கடிதத்தில் அரசு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் ஏடி குரூப் நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளை தான் விசாரிக்கவில்லை என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. தவறான தகவலை அளித்து ஆளுநரையே அரசு ஏமாற்றியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

சிட் பண்டு மோசடி வழக்குகளை சரியான முறையில் விசாரிக்க வேண்டும் என்பதிலும் சிறு முதலீட்டாளர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்பதிலும் நவீன் பட்நாயக் அரசுக்கு துளிகூட அக்கறை இல்லை. மோசடி நிதி நிறுவனங்கள் வளர உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களைக் காக்க அரசு முயன்று வருகிறது.

சிட் பண்டு மோசடி குறித்த விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதை விளக்கி உண்மையான தகவல்களை பொதுமக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். நிதி மோசடி குறித்து விசாரித்து வரும் நீதிபதி பத்ரா கமிஷனுக்கும் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கும் வழக்குகளை நல்ல முறையில் விசாரிப்பதற்கு போதிய ஆள் பலமோ கட்டமைப்பு வசதியோ இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். மோசடி நிதி நிறுவனங்களால் பணத்தை இழந்த சிறு முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.