மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு: அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் அவதி
சேத்துப்பட்டு ஊராட்சியில் தனியார் வீட்டுமனைப் பிரிவுக்குச் செல்ல வசதியாக மழைநீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து சாலை
சேத்துப்பட்டு ஊராட்சியில் தனியார் வீட்டுமனைப் பிரிவுக்குச் செல்ல வசதியாக மழைநீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கப்பட்டதால், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், சேத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள மலைப் பகுதியில் இருந்து வெளியேறும் ஊற்றுநீர் மற்றும் மழைநீர், ஊராட்சிக்குட்பட்ட கருமாரியம்மன் ஆலயத் தெருவில் உள்ள சுமார் ஐந்து அடி அகலமும் ஏழு அடி ஆழமும் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக வந்து சேத்துப்பட்டு ஏரியில் கலக்கும்.
இந்நிலையில் கருமாரியம்மன் ஆலயத் தெருவில் புதிதாக தனியார் வீட்டுமனைப் பிரிவு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மனைப் பிரிவை அமைத்தவர்கள் மழைநீர் கால்வாய் மீது சாலை அமைத்துள்ளனர்.
Advertisement
மேலும் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மழைநீர் செல்ல சிறிய அளவிலான சிமென்ட் பைப்புகளை மட்டுமே புதைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பே புகார் மனு அளித்தும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக மலையில் இருந்து வெளியேறும் ஊற்றுநீர் மற்றும் மழைநீர், ஏரிக்குச் செல்ல முடியாமல் கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் சூழ்ந்துள்ளது.
மேலும் மழைநீர் செல்லும் பாதைகளை தனியார் வீட்டுமனைப் பிரிவுக்காக அடைக்கப்பட்டதால், மழைநீர், சேத்துப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் மழைநீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட பாதையை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.