வேண்டாம் கௌரவக் கொலைகள்
அண்மையில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர், கெளரவக் கொலைகள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் திருமண சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தடுக்க வகை செய்யும் மசோதாவை சட்ட அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர், கெளரவக் கொலைகள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் திருமண சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தடுக்க வகை செய்யும் மசோதாவை சட்ட அமைச்சகம் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு பேரும் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பேரும் ஹரியாணா, குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் எனவும் மொத்தம் 14 பேர், கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது, அந்த அமைப்புக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலான எண்ணிக்கைதான். உண்மையில், வெளிச்சத்துக்கு வராத சம்பவங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கலாம்.
Advertisement
Advertisement
இந்த கௌரவக் கொலைகளுக்குக் காரணம் காதல்தான். உண்மைக் காதல் எப்போது எப்படி ஏற்படும் என்பதைச் சொல்வதற்கில்லை.
அன்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வளரும் காதல் ஜாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு எதையும் பார்ப்பதில்லை. ஆனால், அவைதான் இந்தக் கெளரவக் கொலைகளுக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
சில இடங்களில் காதலின் பெயரால் எல்லை மீறுவது, தகாத உறவு, முறை தவறிய காதல் போன்ற ஒழுக்கக் கேடான விஷயங்களும் கௌரவக் கொலைகளுக்குக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன.
பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, பெரும் கனவுகளுடன் பெற்றோர் இருக்கும்போது, அவர்களின் மகனோ, மகளோ "காதல்' எனக்கூறி அவர்களின் கனவுகளை வேருடன் பிடுங்கி எறியும்போது, பெரும்பாலோரால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
சில நேரம் பிள்ளைகளின் காதலை படிக்காதவர்கள்கூட ஏற்றுக்கொள்வார்கள்; படித்தவர்கள் ஏற்பதில்லை. வசதி படைத்தோர்கூட தங்கள் பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொள்வர். ஆனால், ஏழைகள் ஏற்பதில்லை.
ஆக, கெளரவக் கொலைக்கு, பாமரர் - படித்தவர், ஏழை - பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை.
தங்களது ஜாதிப் பெருமையும் சமூகத்தில் தங்களது நிலையும் என்னாகுமோ, உறவினர்களின் ஏளனப்பேச்சுக்கு உள்ளாகிவிடுவோமோ என்றெல்லாம் யோசிக்க யோசிக்க, கடைசியில் பிள்ளைகள் மீதான அன்பு, கொலை வெறியாக மாறிவிடுகிறது.
"உங்கள் காதலின் உண்மையையும் உறுதியையும் எங்களின் பெருந்தன்மை விஞ்சட்டும்' எனக் கூறி பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டால் கெளரவக் கொலைகளுக்கு சமூகத்தில் இடமே இருக்காது. ஆனால், அவ்வாறு நடப்பதில்லையே.
சில பெற்றோர், தங்களது எண்ணத்துக்கேற்ப பிள்ளைகள் நடக்கவில்லை எனில் எங்கேயோ அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுவிடுகின்றனர்.
திருமணம் முடிந்திருந்தாலும் பரவாயில்லை, தங்களது பிள்ளைகளின் மனதை மாற்றி தங்களுடன் அழைத்துவந்து வேறு திருமணம் செய்துவைத்து, ஜாதி - மதப் பெருமையையும், குடும்ப கெளரவத்தையும் நிலைநாட்டி விடலாம் என்பதே சில பெற்றோரின் மனக்கணக்கு.
அதுவும் கைகூட வில்லையெனில் கெளரவக் கொலை ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதன் மூலம் இழந்த கெளரவத்தை மீட்டுவிடலாம் என்பது அவர்களது நினைப்பு.
கெளரவக் கொலை என்பது பெரும்பாலும் உணர்ச்சி வசப்பட்டு விநாடி நேரத்தில் நடப்பதில்லை. திட்டமிட்டு நிகழ்த்தப்படும் சம்பவங்களே அதிகம்.
அதிலும், கெளரவக் கொலைக்கு ஆண்களைவிட பெண்களே அதிகமாக பலியாகின்றனர் என்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரியவரும் அவலம்.
பிள்ளைகள் காதலித்ததாலேயே தங்களது குடும்ப கெளரவம் போய்விட்டதாகக் கவலையும் ஆத்திரமும் கொள்ளும் பெற்றோர், பிள்ளைகளைக் கொல்வதால் "கொலைகாரர்கள்' என்ற தீராத பழிக்கு தாங்கள் உள்ளாகிப்போவோமே என்பதையோ, பிள்ளைகளின் காதலால் காணாமல்போகும் கெளரவம், தாங்கள் கொலைச் செயலில் ஈடுபடுவதால்தான் திரும்பிவிடாது என்பதையோ நினைத்துப் பார்ப்பதில்லை.
உண்மையில், அந்தக் குடும்பத்தின் கெளரவத்தையும், நன்மதிப்பையும் கொலை செய்பவர்கள் பெற்றோர்கள்தானே தவிர, அவர்களது பிள்ளைகள் அல்லர்.
இத்தகைய கெளரவக் கொலைகளை முற்றிலும் தடுக்க வேண்டுமானால் ஜாதி, மதம் குறித்த மக்களின் பார்வை மாற வேண்டும். இன்னமும் ஜாதி, மதச் சேற்றில் சிக்கி உழன்று கொண்டிருப்போருக்கு போதிய விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். அல்லது தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
காதல் என்ற போர்வையில் அத்துமீறும் ஆண்களுக்கு தண்டனையும், பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியும் உடனடியாகக் கிடைக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காதல் திருமணம் செய்துகொண்டோரைக் காக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்!