சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சிதம்பரம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி...
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜூன் 13) தொடங்கியது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சி.ந.ராஜூ தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் வி.சிவானந்தம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Advertisement
Advertisement
உத்சவ விபரம்:
ஜூன் 14-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 15-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 16-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 18-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 19-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 20-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும், ஜூன் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன். 22-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஜெ.ஜெயசூர்யா தீட்சிதர், துணைச் செயலாளர் ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.