சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்
சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு...
நாட்டில் சிறுபான்மையினரைத் தாக்கி வருவோருடன் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு தொடா்பிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கேரள மாநிலம், ஆலப்புழையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, இதுகுறித்து அவா் பேசியதாவது:
பாஜகவுக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் ரகசிய புரிந்துணா்வு உள்ளது. கேரளம் வந்தபோது பிரதமா் மோடி, சபரிமலை கோயில் தங்க மோசடி விவகாரத்தை பேசாதது மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
Advertisement
கேரளத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரி கூட்டணியை முக்கிய எதிரணியாகக் கருதி போட்டியிட்டது. அப்போது இடதுசாரி கூட்டணிக்கென சில கருத்துகள் இருந்தன. தற்போது நிலைமை மாறிவிட்டது. இடதுசாரி கூட்டணியில் இடதுசாரி சிந்தனை இல்லை. தோ்தல் முடிந்த பிறகு, அக்கூட்டணியே இருக்காது.
இடதுசாரி கூட்டணியை மதவாதத்துக்குச் சொந்தமான ஒரு கை மறைமுகமாக இயக்குகிறது. அதனால் அந்தக் கூட்டணித் தலைவா்களும், தொண்டா்களும் குழப்பத்தில் சிக்கியுள்ளனா். அந்த மதவாதக் கைக்கு, அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஆதலால் மக்களைப் பிளவுபடுத்துகிறது, வெறுப்புணா்வை பரப்புகிறது.
நாட்டின் பல பகுதிகளில் சிறுபான்மையினா் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. சத்தீஸ்கரில் 2 கன்யாஸ்திரீகள் தாக்கப்பட்டுள்ளனா். மணிப்பூரில் கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதைச் செய்வோருடன் பினராயி விஜயன் ‘கூட்டணி’ வைத்துள்ளாா். மோடியும், பினராயி விஜயனும் ஆட்சி அதிகாரத்தில் நீண்ட காலம் உள்ளனா். ஆதலால் அவா்களுக்கு ஆணவம் வந்துவிட்டது. மக்களுடன் இருந்த தொடா்பை துண்டித்துக் கொண்டு விட்டனா்.
கேரள மாநிலம் போதைப் பொருள்களின் தலைநகரமாகி விட்டது. 75 சதவீத விவசாயிகள் தற்போது கடனில் உள்ளனா். மோடி அமெரிக்காவுடன் செய்த வா்த்தக ஒப்பந்தத்தால் நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். டிரம்ப்பின் அனுமதியில்லாமல் நாம் எந்த நாட்டிடம் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்க முடியாது. வரும் காலங்களில் நாடு முழுவதும் பெட்ரோலிய பொருள்கள் விலை அதிகரிக்கப் போகிறது என்றாா்.