கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்?
கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்கள் ஆகியும் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவிகிதத்தை வெளியிடாதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், கேரளத்தில் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொகுதி வாரியாக வாக்குப் பதிவு நிலவரத்தை உடனடியாக வெளியிடக் கோரி கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
அதில் தெரிவித்திருப்பதாவது:
”கேரளத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்து மூன்று நாள்கள் கடந்துவிட்ட போதிலும், தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்கள், தொகுதி வாரியான வாக்கு சதவிகிதங்கள் மற்றும் தபால் வாக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட விரிவான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரவுகள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை. இத்தகைய தகவல்களைத் துரிதமாக வெளியிடுவது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், மக்களின் ஆய்வுக்கு வழிவகுப்பதற்கும், தேர்தல் செயல்முறையின் மீதான நம்பிக்கையைப் பேணிக்காப்பதற்கும் மிகவும் இன்றியமையாததாகும்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, முழுமையான தேர்தல் தரவுகளை எவ்விதக் காலதாமதமும் இன்றி உடனடியாக வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.