கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை ஒதுக்கீடு!
கேரளத்தில் வி.டி. சதீசன் தலைமையிலான அமைச்சரவையில் ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை ஒதுக்கீடு...
கேரளத்தில், முதல்வராகத் தேர்வாகியுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான அமைச்சரவையில் ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, புதிய முதல்வருக்கான போட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இதனால், நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரளத்தின் முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
இந்த நிலையில், முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் வரும் மே 18 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். அவருடன், 11 காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.
இதில், முதல்வர் போட்டியில் இடம்பெற்ற மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு கேரளத்தின் உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, இன்று (மே 16) தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், முதல்வராகத் தேர்வு செய்யப்படாததால் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்பதை ரமேஷ் சென்னிதலா தவிர்த்து வந்தார். இதனிடையே, அவரின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமென காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சன்னி ஜோசப், கே முரளிதரன், திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர்கள் ஏ பி அனில் குமார் ஆகியோரும் கேரள அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.