கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!
கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து...
கேரளத்தில், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு கே.சி. வேணுகோபால். வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா இடையே போட்டி நிலவி வந்தது. இதனால், கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதாக நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று (மே 14) அறிவிக்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில், மூத்த தலைவர்கள் சன்னி ஜோசப், திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் போட்டியில் இடம்பெற்ற மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா பங்கேற்கவில்லை. ஆனால், வி.டி. சதீசனை ஆதரிப்பதாக அவர் கடிதம் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் வி.டி. சதீசன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கேரளத்தின் பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.