11 நாளில் பெட்ரோல் விலை ரூ. 8 உயர்வு! முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்? சிபிஎம்
வி.டி. சதீசன் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 4 முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளதாக சிபிஎம் குற்றச்சாட்டு...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் முதல்வர் வி.டி. சதீசன் மெளனம் காப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் இன்று (ஜூன் 2) குற்றம் சாட்டினார்.
கடந்த 11 நாள்களில் மட்டும் ரூ. 8 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாபெரும் போராட்டத்தை நடத்தியவர் தற்போது ஆட்சியில் அமர்ந்ததும் அமைதியாகிவிட்டதாகவும் விமர்சித்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் எம்.வி. கோவிந்தன் பேசியதாவது:
Advertisement
Advertisement
''கடந்த காலத்தில், எரிபொருள் மீதான வரி வருவாயை அரசு தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வி.டி. சதீசன் எடுத்திருந்தார். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தையும் நடத்தினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது போராட்டத்தின் ஒரு பகுதியாக மிதிவண்டியில் சென்ற புகைப்படமும் உள்ளது.
மாநில முதல்வராக வி.டி. சதீசன் பொறுப்பேற்றதிலிருந்து, எரிபொருள் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளன. ஆயினும், சதீசன் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
மேற்கு ஆசியாவில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் கொள்கைகள் குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
எரிபொருள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. விடுதி, உணவகங்களிலும் விலை ஏற்றம். இதனால் மக்கள் நெருக்கடியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.