கேரளத்தில் முதல்வருக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலா அமைச்சராகப் பதவியேற்பு!
கேரளத்தில் முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட ரமேஷ் சென்னிதலா அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்...
கேரளத்தில், முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கின்றது.
ஆனால், புதிய முதல்வருக்கான போட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இறுதியில், புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, கேரளத்தின் முதல்வராக வி.டி. சதீசன் இன்று (மே 18) காலை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான அமைச்சரவையில் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், முதல்வருக்குப் பிறகு மூன்றாவது நபராகப் பதவியேற்ற ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, வெளியான தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் கா்நாடக முதல்வா் சித்தராமையா, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.