கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!
கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயமாக்கப்பட்டிருப்பது பற்றி...
கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜைப் பொருள்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”அனைத்து கோயில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜைப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். பூஜைப் பொருள்களின் விலைப் பட்டியலை பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது. மஞ்சள் துணிப் பையை மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும்.
கோயிலுக்கு வெளியே வழித்தடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பூஜைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. கடைகள் சுற்றியும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ரமேஷ், கடந்த ஒரு மாதமாக பல்வேறு முக்கிய கோயில்களில் அதிரடி ஆய்வுகளை நடத்தி வருகிறார்.
திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அவர், சிறப்பு தரிசனத்துக்கு லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.