முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?

காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளர் பற்றி...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 5:34 PM
காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளர் ஜோதிமணி - X
பகிர்:

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் அறிவித்த வேட்பாளர் காங்கிரஸ் உறுப்பினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

திருமா ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

Advertisement

இந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் இன்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, புதிய வேட்பாளராக ஜோதிமணி இளையபெருமாளுக்கு முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட இளையபெருமாள் அவர்களின் மகனான ஜோதிமணி இளைய பெருமாள் விசிகவின் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த இளையபெருமாள் ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

அவரது மகன் காங்கிரஸில் உறுப்பினராக இருக்கும் நிலையில் விசிக வேட்பாளராக அறிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதுபற்றி ஜோதிமணியிடம் கேட்டபோது, “இந்தத் தகவல் திடீரென வந்திருக்கிறது. என்னிடம் இதுபற்றி யாரும் கேட்கவில்லை. இருந்தாலும் அந்தத் தொகுதியில் நிற்க காங்கிரஸ்-ல் விருப்பமனு அளித்திருந்தது உண்மை. ஆனால், இதுவரை பதிலில்லை. இந்த நிலையில், திடீரென அண்ணன் திருமாவளவன் இவ்வாறு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.

மற்றபடி, அண்ணனின் அறிவுறுத்தலின்படி அடுத்தகட்ட வேலைகளை செய்ய நான் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது பற்றிய கேள்விக்கு, “நான் ஆரம்ப காலத்திலிருந்து காங்கிரஸில் இருக்கிறேன். இடையில் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து மீண்டும் காங்கிரஸிற்கு வந்துவிட்டேன்.

விசிகவும் காங்கிரஸும் கூட்டணியில் உள்ளனர். அதனால், காங்கிரஸிடம் என்னை வேட்பாளாரக அறிவிக்க விட்டுக் கொடுக்கக் கேட்டிருக்கலாம். அதன் மூலம் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். தலைவர்கள் எடுத்த முடிவில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, 7 தொகுதிகளில் விசிக, 1 தொகுதியில் காங்கிரஸ் நிற்கிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “அப்படியில்லை. நான் எப்படி போட்டியிடுகிறேன் என்று எனக்கு தகவல் வரவில்லை. திருமா அண்ணன் கட்சி சின்னத்திலா அல்லது காங்கிரஸ் சின்னத்திலா என்பதை கட்சித் தலைவர்கள் இணைந்து முடிவெடுப்பார்கள்.

இந்தச் செய்தியை எனது உறவினர் எனக்கு முதலில் கூறினார். ஐயா இளையபெருமாளின் மகனாக என் சமுதாயத்திற்கு எனது சேவையை செய்து வந்திருக்கிறேன். இதில் என்னுடைய சமுதாய சேவையையும் மக்கள் சேவையையும் பாராட்டும் விதமாக விசிக கட்சியில் எனக்கு வாய்ப்பு வழங்கிய திருமா அண்ணனுக்கு எனது நன்றிகள்.

நான் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அண்ணன் எனக்கு வாய்ப்பளித்திருக்கிற இந்த தருணத்தில், என் சமுதாயத்திற்கும் அனைத்து சமுதாயத்திற்கும் அண்ணன் திருமா காட்டுகின்ற வழியில் நான் தொடர்ந்து பயணிப்பேன்” என்று அவர் பதிலளித்தார்.

summary

A Congress Cadre... A VCK Candidate! What Does Jothimani Say About This Sudden Announcement?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments