தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்
தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது பற்றி தொல். திருமாவளவன் விளக்கம்...
தவெக அமைச்சரவையில் விசிக இணைந்துள்ளதற்கு பதவி ஆசை காரணம் இல்லை என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் தவெகவுக்கு ஆதரவு தர முடிவு எடுத்தோம். மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தபோது இதனை தெரிவித்தோம்.
Advertisement
Advertisement
பின்னர் அமைச்சரவையில் இடம்பெற தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை தவிர்க்கக் கூடாது என்று கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு, அந்த நிலைப்பாட்டுக்கு நான் இணங்கும் சூழல் உருவாகியது. நான் அமைச்சராக வேண்டும் என்று எங்களுடைய கட்சியினரும் தவெக தரப்பினரும் கூறினார்கள். ஆனால் நான் அதற்கு இணங்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதிபடுத்தப்பட்டபோது வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்.
நான் சர்வாதிகாரி இல்லை. ஜனநாயகவாதி. திமுக கூட்டணிக்கு நாங்கள் உறுதியுடன் இருந்ததை போகிற போக்கில் விமர்சிக்கக் கூடாது. 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்கிற எங்கள் முழக்கத்தைதான் கட்சியினர் வலியுறுத்தினர்.
தேர்தலுக்கு முன்பு என்னை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பலர் முயற்சித்தார்கள். என்னை குறிவைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பினார்கள். ஆனால் அதற்கு நாங்கள் இடம்தரவில்லை. கட்சியைப் பலவீனப்படுத்தும் வேலையை நாங்கள் செய்யவில்லை. திமுக தலைவருக்கு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் இருந்துள்ளேன். தவெகவுக்கு ஆதரவு என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் எடுத்த முடிவில் தலைமையிட எனக்கு வலிமையில்லை. தேர்தலுக்குப் பின்பும் திமுக கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நான் என்ன கூட்டணியின் தலைவரா?
எங்களுடைய கட்சிக்கு என்று ஒரு வரையறை உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் முடிவெடுத்த பிறகு, நாங்கள் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக உயர்நிலைக்குழுவில் ஆலோசித்து திமுக தலைவரிடம் தெரிவித்த பிறகே தவெகவுக்கு ஆதரவு தர முடிவெடுத்தோம். முடிவெடுக்க, எங்களுக்குத் தேவையான கால அவகாசத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம்.
எங்களுடைய நேர்மை, தூய்மையைக் களங்கப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. பதவி ஆசையில் நாங்கள் தவெக அமைச்சரவையில் இணையவில்லை என்று மு.க. ஸ்டாலினுக்குத் தெரியும். எங்களுக்கும் திமுகவுக்கும் கொள்கைப் புரிதல் உள்ளது. மு.க. ஸ்டாலினின் வாழ்த்துகளோடு, ஆதரவோடு இசைவோடுதான் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவைத் தெரிவித்தோம். எங்களுடைய அரசியல் தூய்மையை களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு.
தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அதைத் தாண்டி கட்சியின் உறுப்பினர்கள் யோசிக்கும்போது கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியது என் கடமை. தலைவராக மட்டுமின்றி உறுப்பினராக நான் அந்த முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். காலத்தின் கட்டாயத்தால் இந்த ஆட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்புகின்றனர் என்று ஏற்கெனவே நான் அறிக்கையில் கூறியிருந்தேன். கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை நிதானமாகவே எடுத்தோம். தற்போது நிலவும் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை ஸ்டாலின் அறிவார்.
சமூக வலைதளங்களில் என்னை மட்டுமே குறிவைப்பது ஏன் என புரியவில்லை" என்று பேசினார்.
அடுத்து வரும் தேர்தல்களில் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, 'அதைப்பற்றி இப்போது பேசவேண்டாம்" என்று கூறினார்.
Why Did the VCK Join the DMK Cabinet: Thirumavalavan Explains
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.