தேர்தலிலிருந்து வேட்பாளர் விலகல்; கட்சியின் நிலைப்பாடு அல்ல: திரிணமூல் காங்கிரஸ்
மறுதேர்தலிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகியது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று அக்கட்சி தெரிவித்தது தொடர்பாக...
மறுதேர்தலிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகியது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில், வன்முறைகள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அத்தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மே 21 ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மறுதேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், அந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
மறுதேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜஹாங்கீர் கானின் இந்த முடிவு அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு; கட்சியின் நிலைப்பாடு அல்ல. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஃபால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் எங்கள் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸின் பல கட்சி அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டும், மூடப்பட்டும், வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்பட்டும் வருகின்றன.
இத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும், எங்கள் தொண்டர்கள் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்து, பாஜகவின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இருப்பினும், இறுதியில் சிலர் அந்த அழுத்தத்திற்குப் பணிந்து, களப்பணியிலிருந்து விலகத் தேர்ந்தெடுத்தனர். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேற்கு வங்கத்திலும் தில்லியிலும் பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.