நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்
நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் இணைந்து தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகே சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய டிடிவி.தினகரன், இன்றைக்கு நாங்கள் ஒரே வேனில் ஒன்றாக நின்று பிரசாரம் செய்வதை பார்த்து, சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்.
நாங்கள் அண்ணன், தம்பி சண்டையிட்டது உண்மைதான். ஏதோ பிரசனை செய்தோம், சண்டையிட்டோம், தற்போது எல்லோரும் ஒன்றாக வந்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எங்களை வரவேற்கிறார்கள். நாங்கள் திமுக என்கிற தீயசக்தியை ஆட்சியிலிருந்து விரட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து வந்துள்ளோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி, பழனிசாமி தலைமையில் உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியாக இணைந்துள்ளோம்.
Advertisement
டெல்டா திமுகவின் கோட்டை என்கிறார்கள், இது ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்தது. இடையில் நாங்கள் கோட்டை விட்டுட்டோம், இப்போது உறுதியாக இதை ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கான தீர்ப்பை பெற ஜெயலலிதா எப்படி சட்டபோராட்டம் நடத்தினார்களோ, அதே போல் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாத்தவர் பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் தான் தஞ்சாவூருக்கு பல திட்டங்கள் கிடைத்துள்ளன. எம்ஜிஆர் காலத்தில் தமிழ் பல்கலைக் கழகம் கிடைத்தது. ஜெயலலிதா ஆட்சியில் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது, அப்போது தஞ்சாவூர் மாநகரில் அழகாக சாலைகள் அமைக்கப்பட்டு எல்லா பகுதிகளும் சிறப்புப் பெற்றது. ஆனால் இன்றைக்கு ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாகாரர்கள் என கூறுகிறார்கள், அவர்கள் உல்டாகாரர்கள் தான். இந்த முறை 8 தொகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என்றார்.