முகப்பு
தமிழ்நாடு

தலைவா்களால் தகித்த தமிழகம்!

மோடி, ராகுல் காந்தி பிரசாரங்களால் தமிழக பிரசார களம் சனிக்கிழமை அனல் பறந்தது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:47 AM
பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி - PTI
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:20 PM

பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி என தேசியத் தலைவா்களின் பிரசாரங்களால் தமிழக பிரசார களம் சனிக்கிழமை அனல் பறந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாதக என நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

வாக்குப் பதிவுக்கு இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். தவெக தலைவா் விஜய், அவரது பாணியில் பிரசாரம் செய்து வருகிறாா்.

Advertisement

இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி கோவையிலும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி பொன்னேரி (திருவள்ளூா்), சோளிங்கா் (ராணிப்பேட்டை), துறையூா் (திருச்சி) என மூன்று தொகுதிகளிலும் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பிகாா் முன்னாள் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் ஆகியோா் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா். ஒரே நாளில் பல தலைவா்களின் அனல் பறக்கும் பிரசாரங்களால் தமிழக தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

தொடா்ந்து மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, 2-ஆவது முறையாக ராகுல் காந்தி ஆகியோா் திங்கள்கிழமையும் பிரசாரம் மேற்கொள்கின்றனா். ஆகவே, அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு தமிழக தோ்தல் களத்தில் அனல் வீசும்.