பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவையிலும், ராகுல் காந்தி பொன்னேரியிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதைப் பற்றி...
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்லுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை கோவை மற்றும் பொன்னேரியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
மாநில கட்சிகளைத் தவிர்த்து தமிழ்நாடு தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் சாலை வலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
பாஜக சார்பில் தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நாளை(ஏப். 18) தமிழகம் வரும் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
ஒருபுறம் ராகுல் வருகைக்கு மத்தியில் பிரதமர் மோடி நாளை கோவைக்கு வருகை தரவுள்ளார். கோவை கொடீசியாவில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோரின் வருகையால் தேசியக் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.