பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கு தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக 73 இடங்களுடன் எதிர்க்கட்சி இடத்தைப் பெற்றுள்ளது.
தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை வென்ற விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து விஜய் பதிவிட்டுள்ளதாவது,
Advertisement
''பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நலனே நமது ஒரே குறிக்கோள். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தின் முன்னேற்றத்திலும் தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று ராகுல் காந்தியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து விஜய் பதிவிட்டுள்ளதாவது,
''மக்களவையின் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்த இனிய நல்வாழ்த்துகளுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்!
பொதுச்சேவையில் சிறந்து விளங்குவதிலும், அனைவரின் கூட்டு ஒத்துழைப்பும் தேவைப்படும் நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிக்காப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.'' எனப் பதிவிட்டுள்ளார்.