பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. ‘மாபெரும் ஆளுமையாக திகழ்ந்ததாகப் புகழாரம்’!!
திரையுலகில் மாபெரும் ஆளுமையாகப் பாரதிராஜா திகழ்ந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...
திரையுலகில் மாபெரும் ஆளுமையாகப் பாரதிராஜா திகழ்ந்ததாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
அதனைத்தொடர்ந்து, பாரதிராஜாவின் விருப்பத்தின்படி, சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து நேற்றிரவு பாரதிராஜாவின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச்சடங்கு மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் இன்று (ஜூன் 11) பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இழப்புக்கு அவருடன் பணியாற்றி, அவர் இயக்கத்தில் நடித்தவர்கள், இசையமைப்பாளர்கள், முக்கிய அரசியல் கட்சியினர் என பலரும் அவரது புகைப்படத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதிராஜாவின் மறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் திரையுலகின் ஒரு மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தார். அவருடைய கலைப் படைப்புகள் தமிழ்த் திரையுலகை வேறு மாதிரியாக மாற்றின. குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்திரித்த விதம். இந்தக் கடினமாக சூழலில் அவரது குடும்பத்தினரும், அவரது ரசிகர்களுக்கும் என இரங்கல்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.