தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும்! அண்ணாமலை
ராகுல் காந்தியின் தமிழகப் பிரசாரம் பற்றி அண்ணாமலை கருத்து...
பிற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரண்டாம் நாளாக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பிரசாரம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்து அண்ணாமலை பேசியதாவது:
Advertisement
”பிற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாததைப் பற்றிதான் ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். அவரது கட்சியின் நிலைமை பூஜ்ஜியம் என்ற அளவிலேயே இருக்கிறது.
அவரும் மு.க. ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்ய விரும்பவில்லை. இருவரும் தனித்தனியாகவே பிரசாரம் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பேசியது, 'ஈயத்தைப் பார்த்து பல் இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருந்தது.
ராகுல் காந்தியின் தமிழக வருகை பெரியளவிலான உற்சாகத்தை தாரவில்லை. மொத்தமே அரை நாள்தான் செலவழித்தார். ஆனால், பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
ராகுல் காந்தியின் பேச்சுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில், திமுக என்பது மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பல் என்பதை நாங்கள் அனைவரும் நன்கு அறிவோம்.” என்றார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், இருமுறை மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்துள்ள ராகுல் காந்தி, கூட்டணியின் தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலினை இதுவரை நேரில்கூட சந்திக்காதது குறிப்பிடத்தக்கது.