கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்!
கேரளத்தில் நாளை நடைபெறும் புதிய அரசு பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பங்கேற்பது தொடர்பாக....
கேரளத்தில் நாளை நடைபெறும் புதிய அரசு பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
மேலும் விழாவில் வயநாடு எம்பியும், காங்கிரஸ் பொதுச்செயலருமான பிரியங்கா காந்தியும் பங்கேற்பர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பாரா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
விழாவிற்கு மற்ற மாநிலத் தலைவர்களையும் தேசியத் தலைமை அழைக்கும் என்று சதீசன் முன்னதாக கூறியிருந்தார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஹிமாசலைச் சேர்ந்த மாநில முதல்வர்களும் விழாவில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கும் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஆனால் விழாவில் பங்கேற்பது தொடர்பாக அவரிடமிருநது உறுதியான தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு கே.சி. வேணுகோபால். வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா இடையே போட்டி நிலவி வந்தது. இதனால், கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதாக நீண்ட இழுபறிக்குப் பிறகு மே 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் புதிய அரசு பொறுப்பேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், முதல்வராகப் பதவியேற்கும் வி.டி. சதீசனுடன் 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்பதாகக் கூறப்படுகிறது.