முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் பெ. சண்முகம் வெளியிட்ட விடியோ பற்றி...

Updated On : 21 ஏப்ரல் 2026, 3:08 pm IST
மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம் - YT | CPIM
பகிர்:

தமிழ்நாட்டின் நலனை அடமானம் வைக்கக்கூடிய அணியில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்னும் சில மணிநேரங்களில் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர் இறுதிக் கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம் விடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அதில், அவர் பேசியதாவது:

"தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு அணியாகவும் பாஜகவுடன் அணி சேர்ந்து மதச்சார்புள்ள அதிமுக - பாஜக கூட்டணி ஒரு அணியாகவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேதான் இந்த தேர்தலில் போட்டி என்பது நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு அணிகள் இல்லாமல் மற்ற சிலரும் இந்த தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். ஆகவே இந்த இரண்டு அணியில் எது சிறந்த அணி என்கிற முறையில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் சீர்தூக்கி பார்த்து தங்களுடைய வாக்குகளை பொருத்தமான அணிக்கு வழங்க வேண்டும் என்று உங்களை அனைவரிடமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால் நடக்க இருக்கக்கூடிய தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டினுடைய நலன், முன்னேற்றம், அதிகாரங்கள், உரிமைகளை பாதுகாப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி மதச்சார்பற்ற கூட்டணி என்பது தேர்தலை சந்திக்கிறது. மாநில உரிமைகளை பற்றி கவலைப்படாமல் மாநில அதிகாரங்கள் பறிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் தான் எப்படியாவது முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தோடு எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அது தமிழ்நாட்டினுடைய நலனை அடமானம் வைக்கக்கூடிய ஒரு அணியாக அந்த அணி என்பது இருக்கிறது.

ஆகவே நமது உரிமைகளை பாதுகாப்பது, அதற்கு பொருத்தமான அணி எது என்பதை தேர்வு செய்ய வேண்டியது தமிழக வாக்காளருடைய மிக முக்கியமான கடமை என்பதை முதலில் நான் சொல்ல விரும்புகிறேன். ஆகவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களுக்கும் அவரவர்களுடைய சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று முதலில் தமிழக வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஐந்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் நீண்ட நெடிய மக்கள் சார்ந்த பணிகளில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டதன் மூலமாக மக்கள் பிரச்னைகள், என்ன பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும், பிரச்னைகளுக்கு எப்படி தீர்வை ஏற்படுத்த வேண்டும், போராட்டத்தில் போராட்டங்களை எப்படி முன்னெடுக்க வேண்டும், அதிகாரிகளை சந்தித்து எப்படி தீர்வு காண வேண்டும் என்கின்ற செல்வமிக்க அனுபவங்களை கொண்டவர்கள் தான் இந்த ஐந்து பேரும் என்பதை முதலில் நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இவர்களுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

EPS Mortgages Tamil Nadu! — Marxist Secretary communist P. Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.