தமிழ்நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு பணியாது! வேளச்சேரியில் கார்கே!
வேளச்சேரியில் நடைபெற்ற மல்லிகார்ஜுன கார்கேவின் பிரசாரம் பற்றி...
ஒருபோதும் அடக்குமுறைக்கு தமிழ்நாடு பணியாது என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னையில் பிரசாரத்தில் மேற்கொண்டுள்ளார்.
வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மெளலானாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
Advertisement
”அரசியல் என்பது வெறும் பேச்சில் மட்டுமல்ல, செயலில் இருக்கிறது. நமது நாட்டில் கல்வி என்ற கருவிதான் முன்னேற்றத்துக்கான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக நமது பிரதமர் மோடி அவ்வாறு பார்ப்பதில்லை. ஏழைகளின் எட்டாக் கனியாக மாற்றியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும்.
திமுக அரசு வழங்கியுள்ள நலத்திட்டங்களை சிந்தியுங்கள், விடியல் பேருந்து பயணத்திட்டம் மூலம் ஒவ்வொரு பெண்ணும் மாதத்துக்கு ரூ. 1,000 சேமிக்கிறார்கள். 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார ரீதியில் வேகமாக 11% வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை பாஜக தடுக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துறது. நாட்டின் வளர்ச்சிக்கு அதிகளவில் பங்காற்றினாலும் குறைந்தபட்ச நிதியே கொடுக்கப்படுகிறது. தில்லிக்கு பணியாததால் கல்விக்கான நிதி முடக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் இழப்பீடுகளும் தமிழ்நாட்டுக்கு குறைவாகவே விடுவிக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் ஆளுநர் குறுக்கிடுகிறார். நடுநிலையுடன் செயல்பட வேண்டிய ஆளுநர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இது கூட்டாட்சிக்கு எதிரானது. ஒருபோதும் தமிழ்நாடு பணியாது.” என்றார்.