ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!
காங்கிரஸ் கட்சியை அழிக்க முக்கிய பதவிகளில் பிரதமர் மோடி தனது ஆதரவாளர்களை நியமிப்பதாக கார்கே பேச்சு...
காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நோக்கில் முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை பிரதமர் நரேந்திர மோடி நியமித்து வருவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். இதனால், அம்மாநில மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.
இந்த நிலையில், 2 ஆவது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்தியப் பிரதேச வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, செய்தியாளர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் அவர் கூறியதாவது:
“மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம், அறநெறிக்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தச் சம்பவம் பிரதமர் மோடியின் உத்தரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி இதைச் செய்கின்றார். முக்கிய பதவிகளில் குறிப்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகத் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களை நியமித்து அவர் சதி செய்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்டுகளை அனைத்து முக்கிய பதவிகளில் பிரதமர் நியமிப்பதாகவும், சட்டம், விதிகளைப் பின்பற்றாத நபர்களுக்கே அவர் அதிகாரம் கொடுப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.