தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
Advertisement
இந்திய தேர்தல் ஆணையம் அமைத்த பறக்கும் படை குழுக்கள் நடத்திய சோதனைகளில், வாக்காளர்களுக்கு வழங்கவிருந்த ரூ. 1,262 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பணமாக மட்டும் ரூ. 543 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச் சாவடிகளுக்கு சுமார் 1.06 லட்சம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 24 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டிருக்கும் 5,938 இடங்களில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.