பள்ளிகளுக்கு 20 கோடி முட்டைகள் சேமித்துவைத்து விநியோகம்? அண்ணாமலை
விலை குறையும்போது முட்டைகளை வாங்கி சேமித்துவைத்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்வதாக புகார்...
விலை குறைந்தபோது சுமார் 20 கோடி முட்டைகள் வாங்கி சேமித்துவைத்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூ. 5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூ. 3.70 என்று விலை குறைந்தபோது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும்போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்னை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
Stockpiling and Distributing 20 Crore Eggs to School students: Annamalai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.