பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1,000 கோடி பறிமுதல்!
தேர்தலையொட்டி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில், ரூ. 1000 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பணம், மதுபானம், போதைப்பொருள்கள், தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் என பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் ரூ. 100.2 கோடி பணமும், மேற்கு வங்கத்தில் ரூ. 27.48 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இதேபோன்று தமிழ்நாட்டில் 1,17,713 லிட்டர் மதுபானம், மேற்கு வங்கத்தில் 39,31,463 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 106.3 கோடி.
மேலும், தமிழ்நாட்டில் ரூ. 76.72 கோடி மதிப்புடைய போதைப் பொருள்களும் மேற்கு வங்கத்தில் ரூ. 108.11 கோடி மதிப்புடைய போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு மொத்தமாக ரூ. 184.3 கோடி.
தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகளும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ரூ. 159.1 கோடி மதிப்புடைய நகைகளும், மேற்கு வங்கத்தில் 55.88 கோடி மதிப்புடைய நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று இலவசமாகக் கொடுக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு மட்டும் இரு மாநிலங்களிலும் சேர்த்து ரூ. 437.97 கோடியாக உள்ளது.
இவ்வாறு, இரு மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், போதைப்பொருள், மதுபானங்கள், நகைகள், இலவசப் பொருள்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 1072.13 கோடி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.