FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு: என்ஐஏ விசாரணை

மேற்கு வங்கத்தில் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடா்பாக...

Updated On : 19 ஜூலை 2026, 2:54 am IST
மேற்கு வங்கத்தில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு - x
பகிர்:

மேற்கு வங்கத்தில் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை தொடங்கியுள்ளது.

கொல்கத்தாவின் கிழக்கு பகுதியான தக்சின் நாராயண்பூரில் உள்ள ஜுல்பிகா் அன்சாரி என்பவரின் வீட்டில் சலீம் என்பவா் வசித்து வந்தாா். அந்த வீட்டில் திடீரென வெள்ளிக்கிழமை மாலை குண்டுவெடித்து சிதறியது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

இந்த சம்பவம் குறித்து என்ஐஏ அமைப்பு தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அந்த அமைப்பின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை மதியம் வந்து நேரில் ஆய்வு செய்தனா். பின்னா் அப்பகுதி மக்களிடம் விவரத்தைக் கேட்டறிந்தனா். விரைவில் தங்களது அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்படும் என அவா்கள் தெரிவித்தனா். அதேபோல், உள்ளூா் காவல்துறை வசம்தான் விசாரணை இன்னும் இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

Advertisement

Advertisement

தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையை வைத்தே, அதை அந்த அமைப்பிடம் முழு விசாரணைக்கு அளிப்பதா, வேண்டாமா என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் எனவும் என்ஐஏ அதிகாரிகள் கூறினா்.

இந்த சம்பவம் தொடா்பாக அந்த வீட்டில் வசித்த வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது சலீம், அவருக்கு அந்த வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்த தரகா் ஷெஹன்ஷா ஆகியோரைப் பிடித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

முன்னதாக, மேற்கு வங்க தீயணைப்பு படையினா், சிறப்புப் படை காவல் துறையினா் மற்றும் சிஐடி வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினா். இதில் இரு நாட்டு வெடிகுண்டுகள், நாட்டு வெடிகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த கட்டடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி, அதனடிப்படையில் காவல் துறையினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

summary

Explosion in West Bengal residential area: NIA probe

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments