விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்தது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இந்த இரு தொகுதிகளிலும் அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும் அதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய்யின் வேட்புமனுவில் அவரது மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதை ஆய்வு செய்யக் கோரி பெரம்பூர் வாக்காளர் வெங்கடேஷ் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
அவரது மனுவில் தெரிவித்திருப்பதாவது:
“சங்கீதா விஜய், விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, வேட்புமனுவில் சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உண்மையான விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையையே ஏமாற்றுவதற்குச் சமமாகும்.
மேலும், ஒரு தனியார் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட ரூ.20 கோடி குறித்த முறையான விளக்கம் எதுவும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் அளிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதேபோன்றதொரு மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க இயலாது” என்று உத்தரவிட்டது.