முகப்பு
தமிழ்நாடு

தஷ்வந்த் விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு - தமிழக அரசு தகவல்

Updated On : 29 மே 2026, 4:53 am IST
உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்
பகிர்:

சென்னை போரூா் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞா் தஷ்வந்த் விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2017-ஆம் ஆண்டு, போரூா் அருகே 6 வயது சிறுமியை தஷ்வந்த் என்ற இளைஞா் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தாா். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இந்த தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உறுதி செய்தது. இந்த தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்து கடந்தாண்டு அக்டோபா் மாதம் தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

மேல்முறையீடு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தஷ்வந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அப்படி ஒரு சான்றிதழை உயா்நீதிமன்றம் வழங்கவில்லை. இதை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் உறுதி செய்துள்ளேன்.

இது நீதித் துறையை ஏமாற்றும் செயல் என்பதோடு, நீதிமன்ற அவமதிப்பு செயலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் புகாா் அளித்துள்ளேன். எனவே, உச்சநீதிமன்ற தீா்ப்பை திருத்தக் கோரி, தமிழக அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், தஷ்வந்த் விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.