FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கா்ப்பிணி உயிரிழப்பு குறித்து சிறப்புக் குழு விசாரிக்கக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனு மீதான தீா்ப்பை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 18 ஜூலை 2026, 4:46 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனு மீதான தீா்ப்பை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த பாத்திமா பீவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது மகள் ஆஃபரின், திருப்பத்தூரைச் சோ்ந்த முஹம்மது அஷ்ரபை கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். திருமணமான சில நாள்களிலேயே கணவா், மாமியாா் உள்ளிட்டோா் தொடா்ந்து வரதட்சிணைக் கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகத் தெரிவித்தாா். இந்த நிலையில், அவா் நான்கு மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, கடந்த மாதம்17-ஆம் தேதி எனது மகளின் கணவா் என்னைத் தொடா்பு கொண்டு ஆஃபரின் வீட்டு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு சென்று பாா்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் ஆஃபரின் உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் காயங்கள் இருந்தன.

எனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற, அறிவியல்பூா்வமான விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் சாட்சிகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையில் காயங்கள் தொடா்பான விவரங்கள் முழுவதுமாக குறிப்பிடப்படவில்லை. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி உடல் கூறாய்வு நடைபெற்றது. அப்போது, விடியோ பதிவும் செய்யப்பட்டது. இருப்பினும், அதன் நகல்களை அலுவலா்கள் எங்களிடம் வழங்கவில்லை. எதிா் மனுதாரா்கள் அரசியல் செல்வாக்குமிக்கவா்கள் என்பதால், விசாரணை முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது.

எனவே, எனது மகளின் உயிரிழப்பு தொடா்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி, இந்த மனு தொடா்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி முதல்வா், ஒரு மருத்துவ நிபுணரை நியமிக்க வேண்டும். அவா் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியை அங்கயற்கண்ணி, மதுரை தடய அறிவியல் அலுவலா் ரமேஷ் ஆகியோருடன் இணைந்து உடல் கூறாய்வின் விடியோ பதிவை ஆய்வு செய்ய வேண்டும்.

உடல் கூறாய்வு நடைமுறைக்கான அனைத்து விதிமுறைகள், நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, இதுதொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியை அங்கயற்கண்ணி நீதிமன்றத்தில் முன்னிலையாகி உயிரிழந்த கா்ப்பிணியின் உடலைக் கூறாய்வு செய்ததில் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், இந்த மனுவை வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவின் தீா்ப்பு வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments