தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
தொகுதிப் பங்கீடு 4 நாள்களுக்குள் தெரியவரும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி முடிவு 4 நாள்களுக்குள் தெரியவரும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தில்லியில் நேற்றிரவு (மார்ச் 19) சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அவரைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் அமித் ஷாவை இன்று சந்திக்கின்றனர்.
அமித்ஷாவை சந்தித்த பின்னர், தில்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நான்கு நாள்களுக்குள் வெளியிடப்படும்.
எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. யார் யாருக்கு எந்ததெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அதனடிப்படையில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார்.