தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!
அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், அதிமுகவுக்குள் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பிரிந்து செயல்படத் தொடங்கி உள்ளனர்.
தனிபெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான 22 எம்எல்ஏக்கள் எதிா்த்து வாக்களித்த நிலையில், அதிமுகவின் தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே சி.வி. சண்முகம் தரப்பில் 25 எம்.எல்.ஏக்கள் திடீரென ஆதரவளித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.
Advertisement
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கான முன்னெடுப்புகளை எஸ்.பி.வேலுமணி தரப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று (மே 19) காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வருகைதந்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்துக்கு வந்த நிலையில், அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இருதரப்பிலும் சட்டப்பேரவைக் குழுத் தலைவர், கொறடா நியமிப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தங்கள் தரப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று அவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலர்களை பதவி விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி அதற்குப் பதிலாக 26 புதிய மாவட்டச் செயலா்களை நியமித்தார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்ட எஸ்.பி.வேலுமணி தரப்பு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. அதிமுகவில் சுமாா் 2,400 பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில், கட்சி விதிகளிபடி, 5-இல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையில் எஸ்.பி. வேலுமணி தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்தக் கூட்டத்தில், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் பதவி தொடர்பாகவும் தீா்மானம் நிறைவேற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.