ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்வி
முதல்வர் விஜய்யை அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி...
சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த கும்பல் பற்றி காவல்துறையில் விஷ்ணு (வயது 23) என்ற புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தகவலறிந்த கஞ்சா விற்பனை கும்பல் விஷ்ணுவை பேச்சுவார்த்தைக்காக அழைத்து, பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த விஷ்ணு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்றிரவு பலியானார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கு பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலைதான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?
இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப்படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை சமரசம் செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத ’கிராஸ் கோர்ஸ்’ (Crash Course) முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?
இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வகிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பை எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami has severely criticized Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.