பதவி கொடுப்பதாக பேரம் பேசிய தவெக: இபிஎஸ்
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது. அதன் அடிப்படையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இது தொடர்பாக, சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
Advertisement
”6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர்கள் பதவி கொடுப்பதாக தவெக பேரம் பேசியுள்ளது. அதன் அடிப்படையில்தான் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.
விஜய் அரசை ஆதரித்து வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த, எடப்பாடி பழனிசாமி, “பொறுத்திருந்து பாருங்கள், பெரும்பான்மை, சிறுபான்மை உறுப்பினர் என்றெல்லாம் இல்லை, பொதுச் செயலர் எடுக்கும் முடிவு இறுதியானது. தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது. அதன் 58 உறுப்பினர்கள் சென்றுவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா? தவெக கட்சிக்குதானே அதிகாரம். அப்படிதான் கட்சித் தலைவருக்குதான் அதிகாரம். அப்படிதான் தீர்ப்பு உள்ளது.
சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச் செயலருக்குதான் இருக்கிறது. சட்டப்பேரவையில் கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைக்கும்.
விதியும் மரபும் மாறாது. விதியையும் பின்பற்றவில்லை, மரபையையும் பின்பற்றவில்லை. தவெகவுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆளுங்கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் சென்றிருக்கிறார்கள், இது முற்றிலும் தவறு. மக்கள் மன்னிக்க மாட்டார்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் மன்னிக்க மாட்டார்கள்.