தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்பு
தவெகவில் குதிரை பேரம் இல்லை என்றும், கட்சிக்கு வருபவர்களை அரவணைப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
தவெகவில் குதிரை பேரம் இல்லை என்றும், கட்சிக்கு வருபவர்களை அரவணைப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
நாமக்கலில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் அருண்ராஜ், தவெகவில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் சிலர் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசியதாவது, "அதிமுகவில் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்துவிட்டு, இங்கு இணைந்து கொண்டிருக்கின்றனர். இது அந்தக் கட்சியின் பிரச்னை.
அவர்களை (திமுகவை) அதிமுக எந்தளவுக்கு எதிர்த்து அரசியல் பேசினார்கள், பேசாத பேச்சு கிடையாது. இருப்பினும், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காகவே அவர்களுடன் கைகோர்ப்பதற்காக அதிமுக பொதுச் செயலர் தயாராக இருந்தார்.
Advertisement
Advertisement
இதனைப் பிடிக்காத காரணத்தினால், சிலர் அங்கிருந்து ராஜிநாமா செய்துவிட்டு, இங்கு வந்தனர்.
மேலும், தவெகவில் குதிரை பேரம் என்று அதிமுகவினர் சொல்கின்றனர். ஆனால், எடப்பாடி தொகுதியில் சூழ்ச்சி மூலம் தவெக வேட்பாளரை வாபஸ் பெற வைத்துள்ளனர். நேரடியாக எதிர்கொண்டு, ஜெயிப்பதற்கான வழியை எதையுமே அவர் (இபிஎஸ்) செய்ததில்லை. அனைத்தையும் எப்படி குறுக்கு வழிகளில் என்றுதான் அவர் பார்ப்பார்.
ஒருவேளை, எங்கள் வேட்பாளர் வாபஸ் பெறாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக எடப்பாடி தொகுதியிலும் தவெகதான் வென்றிருக்கும்.
நாங்கள் யாரையும் அழைக்கவுமில்லை. அவர்களின் தலைமை பிடிக்காமல், அவர்களின் விருப்பத்தால் ராஜிநாமா செய்துவிட்டு வருவதால் அவர்களை நாம் அரவணைக்கிறோம்" என்று தெரிவித்தார்.