பாஜகவின் 'பி' டீம் திமுகதான்: அமைச்சர் அருண்ராஜ்
பாஜகவின் பி அணியாக திமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்
பாஜகவின் பி அணியாக திமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது, "ஆளுநர் உரை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஒரு நிகழ்வு. கடந்த காலங்களில் ஆளுநர் உரை விவகாரத்தில் திமுக செய்த அரசியல் பற்றி உங்களுக்கே தெரியும்.
முதலில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி சொல்வதும், அதனைக் காரணங்காட்டி திமுகவினர் வெளிநடப்பு செய்வதும் திட்டமிட்டு இருவரும் பேசிவைத்துக் கொண்ட நாடகம்தான்.
Advertisement
Advertisement
திமுகவின் கொள்கையை நாங்கள் காப்பியடித்ததாக ஒருவர் கூறினார். நாங்களும் அதே மாநில உரிமை மற்றும் சமூக நீதியை பேசினோம். எங்களால் இதனை சுமூகமாக நடத்த முடிந்தது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நாங்கள் எப்படி கொண்டு சென்றோம்? அதனை ஏன் அவர்கள் (திமுக) செய்யவில்லை? இதிலிருந்தே பாஜகவின் பி டீமாக திமுகதான் செயல்பட்டது தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் திட்டமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய நிகழ்வு மூலம் சுமூகமாக தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, எவ்வித பிரச்னையுமின்றி ஆளுநர் உரை சிறப்பாக நடைபெற்றது. மக்களை அவர்கள் எந்த அளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கின்றனர் என்பதற்கு இது ஒன்றே சாட்சி" என்று தெரிவித்தார்.