தவெகவுக்கு ஆதரவா? 24 மணிநேரத்தில் முடிவு! - சிபிஎம் எம்.ஏ. பேபி
தவெகவுக்கு ஆதரவு குறித்து சிபிஎம் பொதுச் செயலர் பேபி விளக்கம்...
தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது குறித்து 24 மணி நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் 11 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5) நேற்று ஆதரவு அளித்தது.
மேலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்களின் ஆதரவைக் கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்தது.
Advertisement
இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்த எம்.ஏ. பேபி தெரிவித்திருப்பதாவது:
”தவெக தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்யை தமிழ்நாடு ஆளுநர் அழைக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜனநாயக மரபுகளை ஆளுநர் பின்பற்ற வேண்டும்.
எங்கள் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றது. கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்துகளை எட்டும் நோக்கில் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
சற்று முன்னதாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடிக்க இந்த மூன்று கட்சிகளின் செயற்குழுக் கூட்டமும் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.