அதிமுக தலைமையில் ஆட்சி! ஆதரிக்க முயன்றதா திமுக? சிபிஎம் எம்ஏ பேபி பதில்
அதிமுக தலைமையிலான ஆட்சியை ஆதரிக்க முயன்றதா திமுக? என்பது குறித்து சிபிஎம் எம்ஏ பேபி பதிலளித்துள்ளார்.
மதுரை : தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றும்கூட, ஆட்சியமைக்க முடியாத நிலையில், அதிமுக தலைமையிலான ஆட்சியை திமுக ஆதரிக்க முயன்றதா என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் எம்.ஏ. பேபி விளக்கம் கொடுத்துள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, திமுக - அதிமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், திமுக அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தமிழக மக்களின் முடிவுக்கு தலைவணங்குவோம், தவெக ஆட்சியமைக்க இடையூறு செய்ய மாட்டோம் என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.
காட்டுத் தீ போல பரவிய இந்த வதந்தி அடுத்த நாளில், திமுகவின் மறுப்புச் செய்தியால் ஓரளவுக்கு அடங்கியது. மறுபக்கம் அதிமுக பொதுச் செயலர், புதிய உறுப்பினர்களை சொகுசு விடுதியில் தங்க வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே சனிக்கிழமை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் எம்.ஏ. பேபி, தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது குறித்து பேசுகையில், தவெக தலைவர் விஜய் என்னிடம் பேசினார், பிறகு அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கும் நேரில் சென்று பேசியிருக்கிறார். நாங்கள் ஆலோசித்து முடிவை அறிவித்தோம்.
இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இப்போது முதன்மையானது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தவெகவுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். எனவே, தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டாலும் அது ஜனநாயகத்துக்கும் மக்கள் அளித்த வாக்குகளுக்கும் எதிரான செயல்.
மதவாத சக்திகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதையே விஜய் எங்களுக்கும் வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுத்திருக்கிறது என்றார்.
தொடர்ந்து, திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எம்.ஏ. பேபி அளித்த பதிலில் அதுபற்றி எனக்குத் தெரியாது, அதுபுரளியாக இருந்திருக்கலாம், ஆனால், அதிமுக தலைமையில் ஆட்சியமைக்க ஒரு நகர்வு எடுக்கப்பட்டுள்ளது, பாஜக கூட்டணியில் உள்ள, மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி ஆட்சியமைக்க காய்களை நகர்த்தியது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியமைக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதற்கு போதிய ஆதரவு இல்லை. அது எப்படி காய்களை நகர்த்தியது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை, அதிமுக, பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முயற்சி எடுத்தால் நிச்சயம் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும், எங்களது முழு பலம் கொண்டு அதனைத் தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
CPM MA Baby has responded to the question of whether DMK tried to support the AIADMK-led government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.