குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் மீண்டும் தேர்தல்! ஸ்ரீதர் வேம்பு பதிவு
தமிழ்நாடு தேர்தல் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து...
குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் மீண்டும் தேர்தல் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
இதனால் ஆட்சி அமைக்க உரிமை கோரியும் தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் தரப்பில் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. பெரும்பான்மை எண்ணிக்கை பட்டியல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”பெரும்பான்மை எண்ணிக்கை யாருக்கும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் அமைக்கப்படும் எந்த அரசாங்கமும் பல்வேறு இழுபறிகள் மற்றும் அழுத்தங்களால் நிலையற்றதாகவே இருக்கும். தமிழ்நாடு சிறந்த ஆட்சிக்கு தகுதியானது.
குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் புதிதாக தேர்தல்களை நடத்துவதே சிறந்த வழியாக இருக்கலாம். இந்த முறை ’வாக்குக்கு பணம் இல்லை’ என்ற கடுமையான அமலாக்கத்துடன் தேர்தல் நடத்தினால்தான், உண்மையில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும்.
தவெக தலைவர் விஜய் அதீத பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நான் நினைக்கிறேன். அதை திமுக-அதிமுக தடுக்க விரும்பினால், அவர்கள் ஒன்றாகப் போராடட்டும். பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும், அது ஒரு இடத்தைக் கூடப் பெற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. மக்கள் தீர்மானிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.