வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்
வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன் என்பது குறித்து ஸ்ரீதர் வேம்பு விளக்கம் கொடுத்துள்ளார்.
நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்திய பிறகும், அதனை செயல்படுத்தாதது ஏன் என்பது குறித்து ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் கொடுத்துள்ளார்.
மேற்காசிய நாடுகளிடையே ஏற்பட்டிருக்கும் போர் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகக்கூடும் என்பதால், நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். மேலும் மக்கள் ஒரு ஆண்டு வரை திருமணத்துக்காக தங்கம் வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், ஸோஹோ நிறுவனம், பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறையைக் கொண்டுவராதது ஏன் என்பதற்கு நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எங்கள் நிறுவனத்தில், வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிப்பது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்த பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்வதை (WFH) விரிவுபடுத்த வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
ஏனெனில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் (R&D) நேருக்கு நேர் சந்தித்து சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் உற்பத்தித்திறன் மிகவும் அதிகமாக உள்ளது. இதை நான் எனது சொந்த மேம்பாட்டுக் குழுவில் சந்தித்திருக்கிறேன் - சிக்கலைத் தீர்ப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காதபோது, சிக்கல்களைத் தீர்க்க அதிக நேரம் எடுக்கும். நேருக்கு நேர் சந்தித்து ஆலோசிக்கும்போது ஒத்துழைப்பு மிகவும் இயல்பாக நிகழ்கிறது, மேலும் நாங்கள் சிறந்த தீர்வுகளைக் கண்டறிகிறோம்.
எனவே, ஊழியர்களை பணிக்கு அழைத்து வர மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை அமர்த்துகிறோம், அலுவலக உணவகத்தில் மின்சாரத்தில் இயங்கும் அடுப்புகளை அதிகம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம், ஏற்கனவே எங்கள் நிறுவனம் சூரிய ஒளி உற்பத்தியில் அதிக முதலீடு செய்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.