ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் விஜய்!
ஆளுநர் மாளிகையில் விஜய் காத்திருப்பது பற்றி...
தமிழ்நாடு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை சந்திக்க தவெக தலைவர் விஜய் மக்கள் பவனில் காத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
அமைச்சரவை பதவியேற்ற பிறகு, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அவகாசம் கோரிய நிலையில், தற்போதே பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை வழங்க ஆளுநர் அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் ஆளுநரை சந்திக்க மக்கள் பவனுக்கு வருகைதந்திருக்கும் விஜய்யை இதுவரை ஆளுநர் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆளுநருடனான சந்திப்பின்போது, ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என்று விஜய் கோரிக்கை விடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் வந்த காருக்கு மட்டுமே மக்கள் பவனுக்குள் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.