தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்
எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்த நிலையில், தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இன்னும் இரண்டு எம்.எல்.ஏக்கள் தேவையாகவுள்ள நிலையில், விசிகவினர் இன்று மாலை இணைய வழி ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். அவர்களும் தங்களது ஆதரவு கடிதத்தை வழங்குவார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் விரைவில் பதவியேற்கவுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதே நோக்கத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் கண்டது.
இருப்பினும், தேர்தல் முடிவுகளை கட்சியானது, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது. மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும், அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம்.
எனவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது, தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பேரவைத் தேர்தலில், தேசியக் கட்சியான பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், உதகை தொகுதியில் போஜராஜன் என்பவர் மட்டும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.