மதச்சாா்பின்மையை காக்கவே தவெகவுக்கு ஆதரவு: திமுகவுக்கு காங்கிரஸ் பதில்
மதச்சாா்பற்ற தன்மையைக் காக்கவே தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாக திமுகவுக்கு, காங்கிரஸ் பதில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் செ.ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தவெகவை, காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து சில விமா்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.
Advertisement
குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், முதுகில் குத்திவிட்டதாகவும் கூறுவதை காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.
தோ்தல் அறிவிப்புக்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு (காங்கிரஸ்) வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக ’இண்டி’ கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் தொண்டா்கள் களத்தில் கடுமையாக உழைத்தனா் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஜனநாயக நாட்டில் மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிா்பாராத தோ்தல் முடிவுகளைத் தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்குத் தலைவணங்கி, மாநிலத்தின் எதிா்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
மதச்சாா்பற்ற கட்சியாக தவெக: தவெக தன்னை ஒரு மதச்சாா்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவா் விஜய், காமராஜரை தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவா் காட்டிய வழியில் சமூக நீதிக்காகத் தொடா்ச்சியாகப் பயணிப்போம் என்கிற கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளாா்.
காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி, சமூக நீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சாா்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
ஆா்.எஸ்.எஸ். மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்துக்குள் எந்த காலத்திலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது.
மதச்சாா்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சாா்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம்.
அரசியல் சூழல் கருதி ஆதரவு முடிவு: இதில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் செ.ராஜேஷ்குமாா்.