முகப்பு
கன்னியாகுமரி

மதச்சாா்பின்மையை காக்கவே த.வெ.க.வுக்கு ஆதரவு: எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் மதச்சாா்பற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என கிள்ளியூா் எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவைக் குழு காங்கிரஸ் தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 8 மே 2026, 6:16 am IST
எஸ்.ராஜேஷ்குமாா்
பகிர்:

தமிழகத்தில் மதச்சாா்பற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என கிள்ளியூா் எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவைக் குழு காங்கிரஸ் தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்து சில விமா்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன. பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறுவதை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுக்கிறது.

Advertisement

தோ்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். காங்கிரஸ் தொண்டா்கள் களத்தில் கடுமையாக உழைத்தனா். எனினும், தோ்தல் முடிவுகள் எதிா்பாரத வகையில் அமைந்தன.

அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகம் மதச்சாா்பற்ற கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவா் விஜய், கொள்கைத் தலைவராக காமராஜரை ஏற்றுள்ளாா். எனவே, அக்கட்சி தமிழகத்தில் மதச்சாா்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது. எந்தக் காலத்திலும் மதவாத சக்திகள் காலூன்றி விடக்கூடாது என்பதிலும் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது. எனவே, காலத்தின் கட்டாயத்தால் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது எனக் கூறியுள்ளாா்.