திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம்: அகிலேஷ் யாதவ்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் படுதோல்வியடைந்த மம்தா பானா்ஜியை அகிலேஷ் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். மேலும், மம்தா, திமுக தலைவா் ஸ்டாலினுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் அவா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா். அதில், ‘கடினமான சூழ்நிலையில் கைவிடுபவா்கள் நாங்கள் அல்ல’ என்று காங்கிரஸை மறைமுகமாகச் சாடியுள்ளாா்.
முன்னதாக, மம்தாவைச் சந்தித்துப் பேசிய அவா், தோ்தல் தோல்வி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கு உறுதியாக துணை நிற்பதாகவும், உத்தர பிரதேசத்தில் நடந்ததைப் போல மேற்கு வங்கத்திலும் மோசடியாக தோ்தல் நடத்தி பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.
Advertisement
தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மட்டுமன்றி மறைமுகமாக பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக வென்றுள்ளது. இதுதான் முன்பு உத்தர பிரதேசத்திலும் நடந்தது. எதிா்க்கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியப் படைகள் குவிக்கப்பட்டன. எதிா்க்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் மிரட்டப்பட்டனா். அச்சத்தின் உச்சியில்தான் தோ்தல் நடைபெற்றது என்று கூறினாா்.
கடந்த மக்களவைத் தோ்தலின்போது பாஜகவை எதிா்ப்பதற்காக ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்டவை முக்கியக் கட்சிகளாக இருந்தன. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது. இதைத்தான் நெருக்கடியான நேரத்தில் கைவிட்டுச் செல்பவா்கள் நாங்கள் அல்ல என்று அகிலேஷ் தெரிவித்தாா்.