காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்
காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதைப் பற்றி...
காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாதி தலைவரும், எம்பியுமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பாஜகவும், 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மிகத் தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தனியார் நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் நேர்காணலில் பேசியிருந்தார். அவரிடம், வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
Advertisement
Advertisement
காங்கிரஸுடனான கூட்டணி குறித்து அகிலேஷ் யாதவ் பேசும்போது, “நாங்கள் பல கூட்டணிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். எங்களுக்குக் கூட்டணிகளில் அனுபவம் இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி எப்போதும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நாங்கள் ஒருபோதும் யாருக்கும் துரோகம் செய்ததில்லை. இன்று இருக்கும் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்.
எதிர்காலக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இடங்களுக்காகப் பேரம் பேசுவதை மையமாகக் கொண்டிருக்காது. அதற்குப் பதிலாகத் தேர்தல் வெற்றியைப் பெறுவதே நோக்கமாகக் கொண்டிருக்கும்.
எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய கேள்விகளுக்கே இடமில்லை. மக்களவைத் தேர்தலின்போதும், பிரச்சினை தொகுதிப் பங்கீடு பற்றியது அல்ல, வெற்றியைப் பற்றியதுதான் என்று நான் கூறியிருந்தேன். அதே வியூகம்தான் மீண்டும் கைகொடுக்கும்” என்றார் அகிலேஷ் யாதவ்.
பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த தொடர் விவாதங்களுக்கு மத்தியில் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட்டணியை முறித்துக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்தது.
அப்போது காங்கிரஸ், திமுகவுடன் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றிருந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “கடினமான காலங்களில் ஒருவரையொருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.