அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் மறைவு பற்றி...
சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை காலமானார்.
மறைந்த சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது இரண்டாவது மனைவி சாதனா குப்தாவுக்கு பிறந்தவர் பிரதிக் யாதவ் (வயது 38).
இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக லக்னெளவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உடல்நலன் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து வீடு திரும்பியிருந்தார்.
Advertisement
இந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரதீக் யாதவ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு சமாஜவாதி கட்சித் தலைவரும் சகோதரருமான அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகியிருந்த பிரதிக் யாதவ், சொந்தமாக உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வந்தார். உடற்பயிற்சித் துறையிலும் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.
‘ஜீவ் ஆஷ்ரே’ என்ற அமைப்பின் மூலம், தெருநாய்களை மீட்டு, அவற்றுக்குச் சிகிச்சை அளித்தல், உணவளித்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளையும் செய்துவந்தார்.
இவரது மனைவியும் பாஜக நிர்வாகியுமான அபர்ணா யாதவ், உ.பி. மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார்.