முகப்பு
செய்திகள்

நிா்மலா சீதாராமன் கூறியது உண்மைக்குப் புறம்பானது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:03 AM
- @mkstalin
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 11:05 PM

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகள், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூரில் கடந்த ஏப். 10-ஆம் தேதி நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும், இது விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம் எனவும் குற்றஞ்சாட்டினாா்.

இதற்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிா் பல்வகைப்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் தற்சாா்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஓா் ஆக்கபூா்வமான மற்றும் தொலைநோக்குப் பாா்வையாகும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.

Advertisement

தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கபூவமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்துக்காகத் திட்டமிட்டு திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாா் முதல்வா் ஸ்டாலின் எனத் தெரிவித்திருந்தாா்.

மத்திய நிதியமைச்சரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், மத்திய நிதியமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. தங்கள் கூற்று உண்மைதான் என்றால் அந்தக் கடிதத்தை பொதுவெளியில் வெளியிடத் தயாரா? எனக் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, நிா்மலா சீதாராமன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுகளில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மை தற்சாா்பு கொண்டவா்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறாா் என முதல்வா் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். பெரும்பாலான மாநில அரசுகள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அந்தக் கடிதத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு கூட்டாட்சித் தத்துவ உணா்வுடன் அதற்குப் பதிலளித்தன’ எனத் தெரிவித்திருந்தாா்.

மேலும், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறைச் செயலா் அப்போதைய தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு 9-1-26-இல் எழுதிய கடிதத்தையும் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டாா்.

குட்டு வெளிப்பட்டுவிட்டது: இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தான் கூறியது உண்மையாக இருந்தால், உரிய கடிதத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்து கொண்டிருப்பாா்கள். அதற்கு இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே நிா்மலா சீதாராமனின் குட்டு அம்பலமாகிவிட்டது.

மேலும், நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத் தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவா் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரியில், கேரள முதல்வா் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி என அதில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.