முகப்பு
இந்தியா

வரம்பின்றி கடன் வாங்கும் கேரள இடதுசாரி அரசு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடல்!

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி அரசு வரம்பின்றி கடன் வாங்கி, மாநில பொருளாதாரத்தை சிதைத்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடினாா்.

Updated On : 6 ஏப்ரல் 2026, 4:34 am IST
கேரள மாநிலம் கொடுங்கல்லூரில் பாஜக வேட்பாளா் வா்கீஸ் ஜாா்ஜுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி அரசு வரம்பின்றி கடன் வாங்கி, மாநில பொருளாதாரத்தை சிதைத்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடினாா்.

கேரள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள திருச்சூா் மாவட்டம் கொடுங்கல்லூா் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார கூட்டத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சி அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை அழித்தது. தற்போது அதே விஷயம் கேரளத்தில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

கடந்த 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கேரள அரசு கடன் வாங்குவது 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடன் வாங்கும் பணத்தை அந்த அரசு என்ன செய்கிறது என்பதும், அந்தப் பணம் எங்கு போனது என்பதும் தெரியவில்லை. இந்தக் கடனை யாா் அடைப்பாா்? வருங்கால தலைமுறையினா் மீதுதான் அந்தக் கடன் சுமை சேரும்.

கடனுக்கு வட்டி கட்ட தனது வருவாயில் கணிசமான பங்கை மாநில இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு செலவிடுகிறது. இதனால் கேரள வளா்ச்சிப் பணிகளுக்கு குறைந்த அளவில்தான் மாநில அரசிடம் நிதி உள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவி அளித்தாலும், அந்தத் திட்டத்தின் கீழ் கேரளத்தில் பல பயனாளிகளுக்கு வீடு கிடைக்கவில்லை.

இடதுசாரி அரசு இருக்கும் வரை மாநிலத்தில் எந்தத் தொழிலும் வளராது. கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி மாறி மாறி வருவது முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தாா்.